இது அதிமுக கலர் இல்லை... "பறக்கும் குதிரை" பாணியில் விளக்கிய தேர்தல் அலுவலர்!
விருதுநகர்: விருதுநகரில் வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரி அதிமுக கொடி போன்ற சட்டை அணிந்து வந்ததற்கு மற்ற கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். பின்னர் அவர் சட்டையை மாற்றியதும் தான் அங்கு சகஜநிலை ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் எஸ்,. கார்த்திகேயன் என்ற ஆசிரியர் தேர்தல் அலுவலராகப் பணியாற்றினார். நேற்று அவர் வாக்குச்சாவடிக்கு அணிந்து வந்த சட்டை அப்படியே அதிமுக கொடியில் உள்ளதைப் போன்ற நிறத்துடன், வடிவத்துடன் இருந்தது. அவரைப் பார்த்தால் அதிமுக தொண்டர் போலவே தெரிந்தது.
இதைப் பார்த்த அதிமுக தவிர்த்த பிற கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்படுவதாக, அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் பூத் ஏஜென்ட், அந்த அலுவலரை முதலில் வெளியேற்ற வேண்டும் என்று கோபமாக கூறினார். இந்த மோதல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
அந்த அலுவலரோ இது அதிமுக கலர் அல்ல, இது வேற கலர் என்று திரும்பத் திரும்பக் கூறினார். அவர் பேசியதைப் பார்த்தபோது, எம்ஜிஆர் சமாதிக்கு முன்பு இரட்டை இலை சின்னத்தை பிரமாண்டமாக கட்டி விட்டு, கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது அது பறக்கும் குதிரை என்று அதிமுக அரசு விளக்கம் கூறியதைப் போலவே இருந்தது.
வாதம் நீண்டதைத் தொடர்ந்து போலீஸார் தலையிட்டு அந்த அலுவலரை சமாதானப் படுத்தி வேறு சட்டை போட வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.