விறுவிறுப்பாக நடந்த இடைத்தேர்தல் : அரவக்குறிச்சி-81% தஞ்சை - 69% திருப்பரங்குன்றம் - 70%
தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு படு விறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அரவக்குறிச்சியில், அதிகபட்சமாக 81% வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நேரத்திற்குள்ளாகவே வாக்குகள் படு விறுவிறுப்பாக பதிவாகின.
மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தஞ்சை, அரவக் குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது.
இன்று காலை 7 மணியில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
அரவக்குறிச்சியில் அபாரம்
அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி, திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, பாஜக சார்பில் எஸ்.பிரபு, தேமுதிக சார்பில் முத்து உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 81சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூரில் விறுவிறுப்பு
தஞ்சையில் அதிமுக சார்பில் ரங்கசாமி, திமுக சார்பில் அஞ்சுகம் பூபதி, பாஜக சார்பில் ராமலிங்கம், தேமுதிக சார்பில் அப்துல்லா சேட் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி சரபோஜி கல்லூரியில் வாக்களித்தார். தஞ்சாவூர் தொகுதியில் மாலை 5மணி நிலவரப்படி 69சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றம் சுறுசுறுப்பு
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் சரவணன், பாஜக சார்பில் ஸ்ரீனிவாசன், தேமுதிக சார்பில் தனபாண்டியன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.