கடம்பூர் பேரூராட்சி தேர்தல்.. 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு-மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் ரத்து செய்யப்பட்ட 9 வார்டுகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால், பிப்ரவரி மாதம் 7-ம் தேதி, கடம்பூர் முதல் நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில், 1,185 ஆண் வாக்காளர்கள், 1,285 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,470 வாக்காளர்கள் உள்ளனர். 1வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா என்பவரும், 2வது வார்டில் ராஜேஸ்வரி என்பவரும், 11வது வார்டில் சிவகுமார் என்பவரும் சுயேச்சையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி, கடம்பூர் முதல் நிலை பேரூராட்சிக்கான 9 வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடம்பூர் பேரூராட்சியில் 9 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில், 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்து பள்ளிகளில் ஒன்பது வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் 3 காவல் ஆய்வாளர், 10க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் என 120-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, வரும் ஒன்றாம் தேதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.