அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பரில் தேர்தல்?
சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறக் கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அப்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதனால் அங்கு தேர்தல் நடத்துவதை நிறுத்தி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 232 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்...
இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் பதவி ஏற்கும்முன்னரே காலமானார்.
தேர்தல் தேதி எப்போது?
ஆகையால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலுடன்?
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அப்போது இந்த 3 தொகுதிகளுக்கான தேர்தலும் நடத்தப்படுமா? என எதிர்பார்க்கப்பட்டது.
6 மாதங்களுக்குள் தேர்தல்
ஆனால் காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜூன் மாதத்தில் இருந்து கணக்கிட்டால் நவம்பரில் இத்தொகுதிகளுக்குத் தேர்தலை நடத்த வேண்டும்.
நவம்பரில் தேர்தல்?
உள்ளாட்சித் தேர்தல் நடப்பதால், அதனுடன் சட்டசபை தேர்தலை இணைந்து நடத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. 3 தொகுதிக்கான தேர்தல் தேதியை அக்டோபரில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடலாம். ஆகையால் நவம்பரில் 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.