பணப்பட்டுவாடா புகார்: அரவக்குறிச்சியை தொடர்ந்து தஞ்சாவூர் தொகுதி தேர்தலும் மே 23-க்கு ஒத்திவைப்பு!
சென்னை: பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து தஞ்சாவூர் சட்டசபை தொகுதியிலும் மே23-ந் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே25-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மேலும் சில தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடும் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.
தஞ்சாவூர் சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையை அடுத்து அத்தொகுதியில் தேர்தல் மே 16 ஆம் தேதிக்குப் பதில் மே 23ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே25 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.எ ரெங்கசாமி போட்டியிடுகிறார். திமுக வேட்பாளராக டாக்டர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் 6 முனை போட்டி இருப்பதாக கூறப்பட்டாலும் அதிமுக, திமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதும் தொகுதிகளில் கரன்சி மழை பொழிவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
எனினும் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொகுதியில் நிறைவடைந்த நிலையில் நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குப்பதிவையும், இன்று தஞ்சாவூர் தொகுதிக்கான வாக்குப்பதிவையும் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.