தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இளம் வாக்காளர்கள் ஆர்வம்
சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மழை பெய்து வரும் மதுரை, திருப்பரங்குன்றம், ராமநாதபுரம், தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.38 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழாவான சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் தொடங்கியது. இத்தேர்தலில் மொத்தம் 5.82 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி காலை 7 மணிக்கே வந்து எழும்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பிரபலங்கள் வாக்களிப்பு
இதேபோல் விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி முதல் ஆளாக வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜீத் அவரது மனைவி ஷாலினி, நடிகர் கமலஹாசன், கவுதமி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் காலை நேரத்திலேயே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களிக்க ஆர்வம்
மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை நேரத்திலேயே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முதியவர்களும், பெண்களும் அதிகாலையிலேயே வந்து ஆர்வத்துடன் வாக்கினை பதிவு செய்தனர்.
இளம் வாக்காளர்கள்
சட்டசபை தேர்தலில் வாக்களிக்க இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் காலையிலேயே வந்தனர். முதன்முறையாக வாக்களிப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தாமதமாக வந்தால் யாராவது ஓட்டு போட்டு விடுவார்கள் என்று பயந்து காலையிலேயே வந்ததாக பலரும் தெரிவித்தனர்.
சிறப்பு ஏற்பாடுகள்
மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி வந்து வாக்களித்தனர்.
மழையால் மந்தம்
மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் வாக்கப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.
3776 வேட்பாளர்கள்
சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜனநாயகத் திருவிழா
வாக்குப்பதிவுக்காக மொத்தம் 65, 762 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. இதில், 5,417 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குசாவடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 1223 வாக்கு சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 596 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
போலீசார் குவிப்பு
தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளுக்காக, 1.38 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தீவிரம்
பதற்றங்களைச் சமாளிக்கும் வகையில் கூடுதல் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களையும், 5,142 பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்து, 514 அதிரடிப்படைகள் மற்றும் 488 இரவுநேர பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,153 விரைவு நடவடிக்கை குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. இத்துடன் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்தியப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளன.
மே 19 வாக்கு எண்ணிக்கை
தற்போதைய வாக்குப் பதிவு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி சீல்வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். மே 19ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
தேர்தல் ஒத்திவைப்பு
வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்; அத்தொகுதிகளில் 25-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விறுவிறு வாக்கு பதிவு
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்களித்தார். மக்கள் நலக்கூட்டணியின் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். தொகுதியில் மழைக்கான மேகமூட்டம் இருந்தபோதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.