பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து... மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம்
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்ததை அடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள், கடந்த ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி வெளியானது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தேர்வர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, மதிப்பெண்கள் குறித்து சந்தேகமடைந்த தேர்வர்கள் பலர் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இது தொடர்பாக புகார்களை அனுப்பினர். அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 200-க்கும் மேற்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்கள் அவர்களது விடைத்தாள்களில் இருந்த மதிப்பெண்ணுடன் முரண்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. முக்கியமாக சிலருக்கு 60 மதிப்பெண்ணில் இருந்து 80 மதிப்பெண்கள் வரை வித்தியாசம் இருப்பது தெரியவந்தது.
மதிப்பெண்கள் பட்டியல்
இதையடுத்து, கடந்த நவம்பர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதனை, தேர்வர்கள் ஆய்வு செய்தபோது அந்தப் பட்டியலில் மதிப்பெண்கள் மாறியிருப்பது தெரிய வந்தது.
மத்திய குற்றப்பிரிவு
இதற்கிடையே தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் உமா, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதனிடம் கடந்த ஆண்டு புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
8 பேர் கைது
அதன்பேரில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், அந்த தேர்வுக்குரிய விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரித்த டெல்லியைச் சேர்ந்த டேட்டா என்ட்ரி நிறுவனம், தேர்வில் முறைகேடு செய்த 156 பேர் ஆகியோர் மீது மோசடி செய்தல், மோசடி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக இன்று வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டணம் செலுத்த தேவையில்லை
இந்நிலையில் இந்த பாலிடெக்னிக் எழுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வு வரும் மே மாதம் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் டேட்டா என்ட்ரி நிறுவனத்தின் மேலாளர் ரகுபதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.