பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைதான இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் கைதான இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கணேசன், சேக் தாவூத் நாசர், ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம், சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ்பால் மற்றும் கணேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் விரைவுரையாளர் முறைகேடு வழக்கில் தரகர்களாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.