கொம்பில் மோதிரம் சிக்கி.. பொன். ராதா காயம்.. ஜல்லிக்கட்டு மாட்டை தடவிக் கொடுத்தபோது விபரீதம்!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்திற்கு சென்றிருந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது ஜல்லிக்கட்டு மாடு மோதி சிறுகாயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, நமது மண், மொழி, பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யாத்திரை தொடங்கியுள்ளது. முன்னோர்கள் கடைபிடித்த பண்பாடு சிறிது, சிறிதாக மறைந்து வருகிறது. பண்டைய கலாசாரத்தை கடைபிடிப்பதன் மூலம் நாடு உயர்ந்த நிலையை அடையும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் ஜல்லிக்கட்டு தொடர்பாக சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிவித்திருந்தார் பொன்.ரா.
இந்த நிலையில் இன்று அவர் அரியலூர் மாவட்டம் திருமானூர் பாலையப்பாடியில் பா.ஜ.கவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார். குலமாணிக்கம் பகுதியில் செல்லும் போது அங்கு காளை மாடுகளுடன் திரண்டு நின்ற பொதுமக்கள் பலர் திடீரென காரை மறித்தனர்.
பின்னர் பொன்ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது பொன் ராதாகிருஷ்ணன் காளை மாடு ஒன்றை தடவி கொடுத்த போது அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் மாட்டின் கொம்பில் சிக்கியது.
இதனால் சிலிர்த்துக் கொண்ட மாடு கொம்பை எடுக்க முனைந்ததால் பொன்.ராதாவின் கையில் குத்தி விட்டது. இதில் அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை நல்ல செய்தி வரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாடு முட்டி விட்டது.