தி.மு.க. தோல்விக்கு பிரதமர் அலுவலகத்தை குறைசொல்வதா? கருணாநிதிக்கு பொன்.ராதா கண்டனம்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு பிரதமர் அலுவலகத்தை தொடர்புபடுத்தி திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளதற்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த செய்திகள் மூலம் சூழ்ச்சிகள் பின்னப்பட்டு தி.மு.க. தோற்கடிக்கப்பட்டதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு பலர் காரணமென்றும் அதற்கான விளைவை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் கருணாநிதி கூறி இருக்கிறார். யாரை என்று உறுதிப்பட கூறவில்லை. ஆனால் புல்லுருவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
புல்லுருவிகள் என்றால் தி.மு.க.வின் உள்ளேயே இருக்கும் சிலர்தான் இதை செய்து இருக்க முடியும். அவர்கள் யார் என்பதை அறிந்து பெயரை குறிப்பிடாமல் சொல்லி இருக்கிறார். கலைஞர் முதல்வர் ஆவதை எதிர்க்கும் சக்தி யாருக்கு உள்ளது என்பது தி.மு.க.வினருக்கு தெரியும்.
புல்லுருவிகள் என்று குறிப்பிட்டு விட்டு பிரதமர் அலுவலகத்தையும் இழுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கும், தேர்தலுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நன்கு அறிவோம். தேர்தல் ஆணையம் கடந்த காலங்களை விட இம்முறை சற்று கடுமையாக இருந்ததை மறுக்க முடியாது.
ஆகவே கருணாநிதி குறிப்பிட்டு சொல்லி இருக்கும் தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்களில் புல்லுருவிகள் முழுமையாக ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
தனது கட்சியில் சரி செய்ய வேண்டியதை சரி செய்து விட்டாலே பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட முடியும் என்பதை கருணாநிதியும் அறிவார். தி.மு.க. காங்கிரசோடு கூட்டணி அமைத்ததும் தோல்வி உறுதியாகி விட்டது என்பதை அனைவரும் அறிவர். குறிப்பாக காங்கிரசுக்கு தெரியும்.
தி.மு.க. சரித்திரத்தில் முதல் முறையாக தொகுதிப் பங்கீட்டில் தகுதியற்றவர்களுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்ததை தி.மு.க.வினரே குறை கூறினார்கள். இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்குத்தான் சமம்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.