காவிரி வாரியத்துக்காக மல்லிகார்ஜுன கார்கே எப்போது போராடினார்.. திமுகவுக்கு பொன்னார் கேள்வி!
மக்கள் மத்தியில் திமுக தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
மதுரை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே போராடியதாக முரசொலி தவறான தகவலை பரப்பி தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்றுவதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது : முரசொலி பத்திரிக்கையில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த கடைசி பக்கத்தில் இரண்டு புகைப்படங்களும் செய்தியும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனகார்கே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
அந்த புகைப்படத்தின் கீழ் இடம்பெற்றுள்ள செய்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாடாளுமன்றம் முன்பு இவர்கள் போராடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடினாரா. திமுக எப்படி அவர்களின் தொண்டர்களையே ஏமாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எதற்காக போராடினார்கள் தெரியுமா?
தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகத் தான் மல்லிகார்ஜூனகார்கே, ராகுல்காந்தி போராடினார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பேனர்கள் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்காகத் தான். ஆந்திரா எம்பிகள் சிறப்பு அந்தஸ்து கோரியும், திமுக எம்பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கையில் பதாகை ஏந்தி போராட்டம் செய்தனர்.
திமுக எம்பிகளும் போராட்டமும்
திமுக எம்.பிகளிலேயே ஒருவர் மட்டும் தான் கையில் பதாகை வைத்திருக்கிறார், மற்றொருவர் கையில் இல்லை ஏன் தெரியுமா. இந்த பதாகையை கூட எதிர் திசையில் போராடிக் கொண்டிருந்த அதிமுக எம்.பிகளிடம் இருந்து கடன் வாங்கி வந்து திமுக எம்.பிகள் போராட்டம் செய்தனர்.
திமுக ஏமாற்றுகிறது
திமுகவின் தலைமை, எம்.பிகள், அதிகாரப்பூர்வ நாளேடு எப்படி அவர்களின் தொண்டர்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். இது போலத் தான் எல்லாமே நடக்கிறது. தொடர்ந்து மக்களை ஏமாற்றும் செயல்களையே திமுக செய்துகொண்டிருக்கிறது.
மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்
தமிழக மக்கள் இவர்களை நம்ப வேண்டாம், இங்கு இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள். அதைத் தான் நாங்கள் நினைக்கிறோம். திமுகவை பொறுத்தவரை யார் செத்தாலும் பரவாயில்லை ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களைப் பொறுத்தவரை யார் செத்தாலும் பரவாயில்லை, நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
இதுதான் தமிழ் உணர்வா?
தமிழ் உணர்வாளர்கள் என்று பாஜக மீது கல்வீசுவதோ மற்ற செயல்களோ ஏற்கத்தக்கதல்ல. என்ன தமிழ் உணர்வு சில தலைவர்கள் பேசி இருக்கும் வார்த்தைகள் வாந்தி எடுத்தது போன்ற வார்த்தைகள் தமிழனுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள வார்த்தைகள். தமிழனுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வார்த்தைகள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்கப் போன பெண்களை சிலர் கொச்சையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். என்ன தமிழ் உணர்வு என் வீட்டு பெண்ணை தவறான வார்த்தைகளால் திட்டும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.