மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணிகள் விரைவில் துவங்கி முடிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணாண் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. 19 கிமீ தூரமுடைய இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் அந்த பணிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மதுரவாயல் - துறைமுகம் சாலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மதுரவாயல் - துறைமுகம் சாலை பணியை மீண்டும் தொடங்குவது பற்றி குழு அமைக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு திட்டத்தை ஆய்வு செய்யும். பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் தொடங்கி முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது என்பது தவறானது.
தமிழக அரசின் சார்பில் சில பரிந்துரைகள் மட்டுமே அளிக்கப்பட்டுளளன. பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு சாலை திட்டத்தை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.