1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் மகளிர் அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மாற்றம் தேவை
''தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடக்கிறது. மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகிறார்கள். இந்த உற்சாகத்தை பார்க்கும் போது மாற்றம் தேவை என்பது தெரிகிறது.
அதிக இடங்களில் வெல்லும்
நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஜனநாயக முற்போக்கு கூட்டணி தமிழ்நாடு முழுவதும் அதிக இடங்களை கைப்பற்றும்.
1 லட்சம் ஓட்டு வித்தியாசம்
கன்னியாகுமரி தொகுதியில் நான் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். கடந்த 4, 5 நாட்களாக தமிழக மக்களை ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல அ.தி.மு.க.வினரும், காங்கிரசாரும் விலைக்கு வாங்கினார்கள். ஆனால் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
பணப்பட்டுவாடா
இன்று கூட கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட மேக்கா மண்டபம் பகுதியில் வாக்குசாவடி அருகே நின்று கொண்டு ஆளும் கட்சியினர் ஓட்டுக்கு ரூ.500 கொடுப்பதாவும், அதற்கு போட்டியாக காங்கிரசாரும் பணம் கொடுப்பதாக புகார் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை தீவிரமாக நடந்தது. ஆனால், கடந்த 4, 5 நாட்களாக வாகன சோதனையே நடத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையம் தேவையா
புகார் தெரிவித்தால் அதற்கான ஆதாரத்தை நீங்களே கொண்டு வாருங்கள் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் காற்றை விட வேகமாக சென்று நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த சம்பவங்களை தடுக்க முடியும். இந்த தேர்தலில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தேர்தல் ஆணையம் தேவை தானா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
எஸ்.வி.சேகர்
பாஜக பிரசாரகுழுவின் செயலாளர் எஸ்.வி.சேகர், மந்தைவெளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் மனைவி, மகன், மகள்கள், தாயார் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தனர்.
இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர்
தென்காசி மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியும் தற்போதைய வேட்பாளருமான லிங்கம் ராஜபாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் வாக்களித்தார்.
செங்கோட்டையில் செந்தூர் பாண்டியன்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். ஆண்கள் நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.