ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர்களிடையே மோதல்- மேனகா காந்திக்கு பொன். ராதா கண்டனம்
நாகர்கோவில்: தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, ஜல்லிகட்டு ஆபத்தான விளையாட்டு என்றும், இதனை விளையாட உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது என்றும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து அரசியல் செய்வதை பாஜகவினர் நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேனகா காந்தியின் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே நாகர்கோவிலில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதா கிருஷ்ணன், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்தத் தடையை நீக்க மத்திய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும், சென்னையில் மேனகாகாந்தி ஜல்லிக்கட்டு குறித்து தெரிவித்த கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதிபடத் தெரிவித்தார்.