வரும், ஆனா வராது.. காங்கிரசுக்கு ஒரு ஏர்போர்ட் நாசா, பாஜகவுக்கு பொன்.ரா!
சென்னை: அடுத்த காமராஜர் இவர்தான் என்று தென் தமிழக மக்கள் பலரும் வாயார புகழத்தொடங்கிய ஈரம் காய்வதற்குள், அடுத்த ஏர்போர்ட் நாசா என்று செல்ல பெயர் எடுத்துள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் நடைபெற்றபோது, மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் நாராயணசாமி.
டெல்லியில் இருந்து சொந்த ஊரான புதுச்சேரி வரும் வழியில் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிப்பது நாராயணசாமியின் வாடிக்கை. பத்திரிகையாளர்களை கண்டால் அஞ்சி ஓடும் அரசியல்வாதிகள், பதிலளிக்க முடியாமல் சண்டைபோட்டு, துப்பும் அரசியல்வாதிகள் மத்தியில், விரும்பி கூப்பிட்டு பேட்டியளித்தவர் நாராயணசாமி.
கூடங்குளம் கும்மாங்குத்து
பேட்டியளிப்பதில் எல்லாம் எந்த குறையும் வைக்கவில்லை என்றாலும், நாராயணசாமி ரிப்பீட் மோடில் ஒரே கருத்தை ஒவ்வொருமுறையும் கூறிவந்ததுதான், சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியது. குறிப்பாக, கூடங்குளம் பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரத்தில், அடுத்த வாரம் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும் என்று ஒவ்வொரு வாரமும் கூறிவந்தார். இப்படியே வருடங்களும் கடந்தது பெரிய கதை.
ஏர்போர்ட் நாசா என்று அன்போடு..
வலைஞர்களுக்கு இது பெரிய நையாண்டி சமாச்சாரமாக மாறியது. நாராயணசாமி என்ற பெயரை சுறுக்கி, நாசா என்றும், ஏர்போர்ட்டில் பேட்டியளித்ததால் ஏர்போர்ட் நாசா என்றும் செல்ல பெயர் வைத்து கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.
நாஞ்சிலாரை மிஞ்சிய நாசா
நாராயணசாமியை வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி, தற்போது நாஞ்சில் சம்பத் பட்டபாட்டை நாராயணசாமி அப்போது பட்டுக்கொண்டிருந்தார். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால், இப்போது நாராயணசாமி ஏர்போர்ட் வருவதுமில்லை, நிருபர்களை சந்திப்பதும் அரிது.
இப்போ பொன்.ரா
நாராயணசாமியின் பணியைத்தான் இப்போது மத்திய இணை அமைச்சராக பதவியிலுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டுள்ளார். அப்போது கொளுந்துவிட்டு எரிந்த பிரச்சினை கூடங்குளம் என்றால், இப்போது ஜல்லிக்கட்டு. ஆனால் இருவரும் கூறும் பதில்களும் ஒரே மாதிரியானவைதான்.
நல்லகாலம் பொறக்குது..
ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதியளிக்குமா இல்லையா என்பதெல்லாம், புரியாத புதிராக இருந்த காலத்தில் இருந்தே, இன்னும் சில நாளில் நல்ல அறிவிப்பு வரும் என்று குறிசொல்வதை போல சொல்லிக்கொண்டேதான் வருகிறார் பொன்.ரா.
அஜெண்டாவிலே இல்லையாம்
பொன்னார் கூறியபிறகு இன்றோடு சேர்த்து இரு மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இரண்டிலுமே, ஜல்லிக்கட்டு என்பது அஜெண்டாவிலேயே சேர்க்கப்படவில்லை. ஆனால், பொன்னார் சளைக்கவில்லை,. விடாமல் துரத்தும் விக்ரமாதித்தன் போல ஒற்றை பதிலை வைத்து ஒரு மாதமாக ஓட்டிக்கொண்டுள்ளார்.
நாராயணசாமி சொன்னதும் நடந்தது
நாராயணசாமி கூறியதைப்போல, கூடங்குளம் அணுமின் நிலையம் திடீரென சில நாட்கள் இயங்கின. ஆனால் அது தான் கூறியதால்தான் நடந்தது என்பதை நாராயணசாமியே நம்பியிருக்க மாட்டார். சில நாட்களிலேயே மீண்டும் கூடங்குளம் முடங்கியது.
பொன்னாருக்கும் அதே கதி
இப்போது, பொன்னார் கூறியதைப்போல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜல்லிக்கட்டு நடத்த அறிவிக்கை வெளியிட்டது. ஆனால் சூட்டோடு சூடாக அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தபோது, தென்னகத்து மண்ணில் பிறந்த இன்னொரு காமராஜர் என பொன்னாரை புகழ்ந்தவர்களில் பலரும் இப்போது என்னவோ, இவர் இன்னொரு நாசாவாகிவிட்டாரே என புலம்புகிறார்கள்.