அடடே! எதிர்க்கட்சித் தலைவர் "தளபதி"- ஸ்டாலினுக்கு பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம்!
எதிர்க்கட்சித் தலைவர் 'தளபதி' என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம் சூட்டி திமுகவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தளபதி என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் புகழாரம் சூட்டியது திமுகவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டின் 14ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 4,896 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் நாடு முழுவதும் வாக்களித்து வருகின்றனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக நாடாளுமன்றம் மற்றும் மாநில தலைமை செயலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
55 எம்பிக்களுக்கு மட்டும் சொந்த மாநிலங்களில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதால் தமிழக எம்பிக்கள் டெல்லியில் வாக்களிக்கின்றனர்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தேர்தல் முகவர் என்பதால் அவர் சென்னையிலேயே வாக்களிக்கிறார். கேரளா எம்.எல்.ஏ. ஒருவரும் சென்னையில் வாக்களிக்க கடிதம் கொடுத்திருந்தனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் முகவர் என்பதால் அவர் சென்னையிலேயே வாக்களித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், குடியரசுத்தலைவர் தேர்தல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலை விட அதிக பாதுகாப்புடன் நடைபெறுகிறது என்று கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் தளபதி ஆகியோர் வாக்களித்துள்ளனர் என்று கூறினார். திமுகவினர் மட்டுமே ஸ்டாலினை தளபதி என்று மரியாதையுடன் அழைப்பார்கள். அதே போல மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது திமுகவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த சில மாதங்களாகவே ஸ்டாலின், பொன். ராதாகிருஷ்ணன் இடையே அறிக்கை போர், வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் திடீரென தளபதி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயலலிதாவை அம்மா என்றும், திமுக தலைவர் கருணாநிதியை கலைஞர் என்றும் கூறி பேசுவார் பொன். ராதாகிருஷ்ணன். அதே பாணியில் ஸ்டாலின், தளபதி என்று பேசியுள்ளார் பொன். ராதாகிருஷ்ணன்.