1967ல் அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாதவர்களா தற்போது நிறைவேற்றப் போகிறார்கள்: பொன்னார்
செங்கோட்டை: 1967ம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாதவர்களா தற்போது நிறைவேற்றப் போகிறார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கோட்டை வாகைமரத்திடலில் பாஜக கடையநல்லூர் சட்டசபை தொகுதி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய கப்பல் மற்றும் சாலைபோக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பரவலாக தேர்தல் அறிக்கை என்பது சிலவற்றை சார்ந்தே இருக்கும். நாங்கள் உள்ளதை உள்ளபடி நல்லது நடப்பதை செல்லியுள்ளோம். அதனையே செய்ய வேண்டும் என்று சொல்கிறோம். அவர்கள் ஏமாற்றும் அறிக்கையை சொல்லியுள்ளனர். சொல்லியும் வருகிறார்கள். எது உண்மை என்பதை கண்டறியும் முடிவு மக்கள் கையில் உள்ளது.
1967ல் சொன்னதையே செய்யாதவர்கள். அப்போது அளித்த வாக்குறுதிகளிலேயே பாக்கியுள்ளது. 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொன்னார்கள் என்னவாயிற்று. நடைமுறைக்கு சாத்தியமில்லாததை கூறி ஏமாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த மொழி திணிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பாஜகவும் ஏற்றுக் கொள்ளாது.
தமிழகத்தில் தமிழைத் தவிர பிற மொழிகள் தனியார் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறதே. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு கருணாநிதி யாரையும் சிபாரிசு செய்யவில்லை அவரது குடும்பத்தை சார்ந்தவரையே சிபாரிசு செய்தார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகள் பேசும் தகுதி இருப்பதாகவும், பல மொழிகள் தெரியும் என்றும் கூறினார்.
அவர்கள் குடும்பத்தினர் மட்டும் இந்தி, ஆங்கிலம் படிக்க வேண்டும். மற்ற குழந்தைகள் படிக்கக் கூடாதா?. தமிழக மக்கள் வாயில் மண்ணு இது தான் திமுக, அதிமுக. வேட்பாளர் மாற்றம் என்பது சில சமயம் சூழ்நிலையை பொருத்தது. ஆனால் அதுவே வேலையாக இருந்தால் என்ன சொல்வது. தமிழக முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல் மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிரந்தர தீர்வு காணும் வண்ணம் அடுத்த மாதம் இலங்கை அமைச்சர்கள் குழு இந்தியா வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சட்டசபை தேர்தலில் 60 சதவிகிதம் மக்கள் மாற்றத்தை நோக்கி உள்ளனர். 1996ஆம் ஆண்டைப்போல் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றார்.