அதெல்லாம் கிடையாது, எங்க கூட்டணியில் விஜயகாந்த் நீடிப்பார்.. பொன்.ராதா நம்பிக்கை
சென்னை: பா.ஜ.க கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலக மாட்டார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் இன்று நிவராண உதவிகள் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு நிவாரண உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 1 மாதமாக பாஜக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்து உள்ளோம். நிவாரணப் பணிகளில் பாஜக முதல்நிலை வகிப்பதில் பெருமை படுகிறோம்.
தமிழக வெள்ளசேதம் பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி நேரடியாக வந்து பார்த்ததுடன் ரூபாய் 2 ஆயிரம் கோடி முதல் கட்டமாக ஒதுக்கினார்.
வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார். வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று அருண்ஜெட்லி அறிவித்து உள்ளார். பாதிப்படைந்த தொழிற்சாலைகளை மறு சீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தன்ராஜ் மித்ரா அறிவித்து உள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணியினர் சந்தித்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து இருப்பதும் அரசியலில் நடப்பவைதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். ஆனால் விஜயகாந்தை பொருத்த வரை எந்த பக்கமும் போக மாட்டார். அவர் எங்கள் கூட்டணியில் தான் தற்போது இருக்கிறார். இந்த கூட்டணி தொடரும் நல்லாட்சி அமைய ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த கூட்டணியில் அவர் நிச்சயம் நீடிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.