ஏதோ வாய் தவறி கூறியதை பெரிதுப்படுத்தாதீர்.. "ராஜாவின் எடிட் வீடியோவுக்கு" பரிந்து பேசும் பொன்னார்
சென்னை: நீதிமன்றம் குறித்து எச் ராஜா ஏதோ வாய்தவறி கூறியதை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க வேண்டும் என எச் ராஜா உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது மிகவும் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த எச் ராஜாஒரு கட்டத்தில் போலீஸாரை கேவலமாக பேசினார்.
கெட்ட வார்த்தை
வழிப்பாட்டு தலங்கள் பக்கத்தில் மேடை அமைக்கக் கூடாது என்பது ஹைகோர்ட் உத்தரவு என்று போலீஸார் கூறியதற்கு ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்றதுடன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கெட்ட வார்த்தையில் பேசினார்.
பாதிப்பில்லை
இதுதொடர்பாக எச் ராஜாவை கைது செய்ய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசும் எச் ராஜா ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என்றே சப்பைக்கட்டு கட்டி வருகின்றனர். எச் ராஜா பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிப்பில்லை என்பது போன்றும் கூறினர்.
பெரிதுப்படுத்த வேண்டாம்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில் எச் ராஜாவின் வாதம் சரி, ஆனால் வார்த்தை தவறு என்று கூறியிருந்தார். அதுபோல் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் எச் ராஜா வாய் தவறி கூறியதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எடிட் செய்துவிட்டார்கள்
இதில் ஹைலைட் என்னவென்றால் எச் ராஜா பேசியதை பெரிதுப்படுத்தாமல் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் பேசி வரும் நிலையில் எச் ராஜா நான் அப்படி பேசவே இல்லை. யாரோ எடிட் செய்துவிட்டார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.