தமிழகத்தில் விரும்பியபடி கூட்டணி... திருப்பதியில் மொட்டை போட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: லோக்சபா தேர்தலில் விரும்பிய கூட்டணி அமைந்ததால், திருப்பதி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டதையடுத்து தமிழகத்தில் விரும்பியபடி கூட்டணி அமைந்தால் முடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் செய்திருந்தாராம் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தனது கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது பாஜக.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கட்சி நிர்வாகிகளுடன் காரில் திருப்பதி புறப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் . நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார்.
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
தமிழகத்தில் வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்காக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன். லோக்சபா தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். நாளை முதல் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.