இவ்ளோ எண்ணெய் கொட்டியது எங்களுக்கு தெரியாது... பொன். ராதாகிருஷ்ணன் அலட்சியம்
கடலில் இவ்வளவு எண்ணெய் கொட்டிவிட்டது என்பது முதலில் எங்களுக்கு தெரியாது என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எண்ணூர் பகுதியை பார்வையிட்ட பின்னர் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகில் கப்பல்கள் மோதி எண்ணெய் கடலில் பரவியுள்ள பகுதியை கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
விபத்து நடந்த கப்பல் நிறுத்தப்பட்ட இடத்தை 30ம் தேதி ஆய்வு செய்தேன். அப்போது எண்ணெய் அதிகமாக அங்கு இல்லை. துறைமுகத்தில் உள்ளவர்களும் அதிகமாக எண்ணெய் கொட்டவில்லை என்று சொன்னார்கள். அதனால் எண்ணெய் அதிகம் கொட்டவில்லை என்றுதான் நினைத்தேன்.
கப்பல் இரண்டாக உடைந்துவிடக் கூடாது என்றுதான் எங்களது கவலையாக அப்போது இருந்தது. 32,813 டன் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்தது. கப்பல் உடைந்திருந்தால் அது பெரிய பிரச்சனையாக மாறியிருக்கும். அதனால் கப்பல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணெய் வெளியேற்றப்பட்டது. இதற்கே 2 நாட்கள் ஆனது.
அதே நேரத்தில் எர்ணாவூர் பகுதியில் கடலில் இருந்த எண்ணெய் அகற்றும் பணி தொடங்கி நடைபெற்றது. எண்ணெய்யை அகற்ற பல வழிமுறைகள் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் இங்கு கடைபிடிக்க முடியாது. அதனால்தான் மனித ஆற்றலை நாம் பயன்படுத்துகிறோம்.
கடலில் உள்ள எண்ணெய்யை அப்புறப்படுத்தக் கூடிய அனைத்து உபகரணங்களும் இங்கு உள்ளன. ஆனால் அவற்றை இங்கு பயன்படுத்த முடியாது. அவைகளை வைத்து கடலோரத்தில் உள்ள எண்ணெய்யை அகற்ற முடியாது.
ஏறக்குறைய 24 கி.மீ. தொலைவிற்கு இதன் தாக்குதல்கள் இருக்கும் என்று கூறியிருந்த நிலையில், மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இருந்த எண்ணெய் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. எண்ணூரில் மட்டும்தான் இப்போது எண்ணெய் இருக்கிறது. இதனை சுத்தம் செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும்.
துறைமுகத்தில் உள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் வேலையை துறைமுக அதிகாரிகள் பார்க்க வேண்டும். துறைமுக எல்லைக்கு வெளியே உள்ள எண்ணெய் படலத்தை கடலோர காவல்படையினர் அகற்ற வேண்டும். மற்ற கடலோர பகுதிகளில் உள்ளவற்றை தமிழக அரசு அகற்ற வேண்டும். இதில் எந்த குழப்பமும் இல்லை.
இந்த விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை முடிவடைந்த பின்னர்தான் எதனால் இந்த விபத்து நடந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
கடலில் இருந்து பிடிக்கும் மீனை சாப்பிட்டால் ஆபத்து என்று வதந்தி கிளப்பப்படுகிறது. அதனை பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.