பாஜகவிற்கு மட்டுமே ‘அந்த’த் தகுதி உள்ளது... தேர்தல் நேரத்தில் 'தெளிவாக' பேசும் பொன்.ராதா
தென்காசி: தமிழக மக்கள் ஊழல் அற்ற தூய்மையான அரசியல் மாற்றத்தை விரும்புவதாகவும், அந்தத் தகுதி பாஜகவிற்கு மட்டுமே இருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் எல்லாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், தென்காசி சட்டசபைத் தொகுதி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
வாழ்த்து...
நாளை நடைபெற உள்ள தேமுதிக மாநில மாநாடு சிறப்பாக நடைபெற பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு சிறப்பாக நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அரசியல் மாற்றம்...
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். 50 ஆண்டுகாலமாக உள்ள ஆட்சிகளுக்கு மாற்றாக ஊழல் அற்ற நேர்மையான தூய்மையான அரசியலை மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விரும்பும் இந்த தகுதியான கட்சியாகவும், அதற்கான தகுதி பாஜகவிற்கு மட்டுமே உள்ளது எனவும் மக்கள் நம்புகிறார்கள் எனவே அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகின்றோம்' என்றார்.
சர்ச்சை...
பாஜக தலைவர் ஒருவர் விவசாயிகள் தற்கொலை பேஷன் என கூறியுள்ளது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த கேள்விக்கு, ‘அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார் அவர் அந்த பொருளோடு சொல்லவில்லை என்பதையும் தெளிவு படுத்தி இருக்கிறார். அந்த பொருளோடு சொல்லவில்லை என்று தெரிவித்த பின்னரும் அதனை பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவேண்டியது தேவையில்லை. அவர் சொன்னதாக கூறிய கருத்தை பொருத்தவரையில் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது' எனத் தெரிவித்தார்.
தேர்தல் கொள்கைகள்...
அதனைத் தொடர்ந்து, தேர்தலை பாஜக எந்த கொள்கைகளை முன்னிறுத்தி சந்திக்க உள்ளது என்ற கேள்விக்கு, ‘மக்களை சார்ந்த சிந்தனை ஆட்சியாளர்களுக்கு வந்தாக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். வேலைவாய்ப்பு,நீர்ப்பாசனம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். கல்வியை பொறுத்து வரையில் இப்போது இருக்கும் நிலைக்கு மாறாக அனைத்து தகுதிகளுடம் நிரம்பிய பள்ளிக்கூடமாக அரசு பள்ளிகள் மாற வேண்டும் என விரும்புகிறார்கள்.
மக்கள் நலன்...
அரசு பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து செயல்படவேண்டும் எனவும் தங்கள் திறமைக்கு தகுந்த வேலை இளைஞர்களுக்கு வழங்கும் அரசு அமைய வேண்டும் என்றும்,அரசின் ஊழியர்களாக செயல்படுபவர்களுக்கு ஓர் நம்பிக்கை அரசின் மீது ஏற்பட வேண்டும் இந்த அரசு மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. அதன் காரணமாக. நான் அவர்களுக்காக செயல்படவேண்டும் என்ற எண்ணம் ஊழியர்களுக்கு வந்தாக வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக பாஜகவினால்தான் செயல்பட முடியும்' எனத் தெரிவித்தார்.
ஃப்ரீடம் 251...
ஃப்ரீடம் 251போன் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, ‘எந்த செயலும் துவக்கப்படும்போது அதனை சரி செய்யப்படவேண்டும். அதற்கு முன்பு முடக்கினால் ஒரு திட்டமும் செயல்படுத்த முடியாது. திட்டங்கள் தீட்டப்படும் போது உருவாகும் பிரச்சனைகள் நடைமுறைக்கு வரும்போது வரும் போது அதிகரிக்கும். பின்னர் அது சரி செய்யப்படும் வகையில் இருக்கும்' என்றார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம்...
மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் பாஜக மிகத்தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் ,காமராஜர் ஆட்சிக்கு பின் பெரிய அளவிலான நீர்ப்பாசன திட்டங்கள் குடிநீர்த்திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. அத்திக்கடவு - அவினாசிதிட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டம் எனத் தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜக சார்ந்த அரசு அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. வருகின்றன அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பாஜக கவனம் கொடுக்கும். திட்டத்திற்கு தேவையான மத்திய அரசின் உதவிகளை முழுமையாக்கும் செய்ய கவனம் கொடுப்போம். எனது வேண்டுதல் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நம் சகோதரர்கள் வருகின்ற சில மாதங்கள் பொருத்து அடுத்து வரும் அரசு செயல்படுத்தாவிட்டால் தங்கள் போராட்டங்களை அப்போது தொடரமுடியும் இப்போது உங்கள் போராட்டங்கள் வெற்றி. என கருதுகிறேன் அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் இன்று அத்திகடவு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். மக்களின் போராட்டத்தின் நியாயமும் புரிந்துகொண்டுள்ளார்கள். எனவே பாஜக வின் மீது நம்பிக்கை வைத்து இந்த போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாஜக கட்சி திட்டத்தை நிறைவேற்ற எல்லா உதவிகளையும் செய்யும்' எனத் தெரிவித்தார்.
அரசு ஊழியர் போராட்டம்...
அரசு ஊழியர் போராட்டம்குறித்த கேள்விக்கு தற்போதைய நிலையை மனதில் வைத்துபார்த்து அவர்களும் போராட்டத்தை கைவிடுவது சரியாக இருக்கும் எனக் கருதுவதாகக் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், நியாயமான கோரிக்கைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட வேண்டும், ஒவ்வொரு பிரச்சனையும் அரசியல் ஆதாரத்துடன் அரசியல் கட்சிகள் பார்க்க ஆரம்பிப்பது தவிர்க்கப்பட்ட வேண்டும் ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி வரும் போது அரசியல் கட்சிகள் அத்திக்கடவுதிட்டத்தையோ ,அரசு ஊழியர் பிரச்சனையோ நினைத்து பார்த்தது கிடையாது. எதிர் தரப்புஆட்சியின் போது இவர்கள் போராடுவது, அப்புறம் அவர்கள் போராடுவதும்,நிகழ்வாகிறது. அதற்கு மாற்றான சிந்தனையை பாஜக செயல்படுத்தும் என்பதைதெரிவிக்கிறேன்' என்றார்.