வாழ்நாள் முழுவதும் தேச நலனுக்காக அர்பணித்தவர் இல. கணேசன் - பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
சென்னை: தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல.கணேசன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த இடம் காலியாக உள்ளது. காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த இடத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான இல. கணேசன் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். அவருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தன் வாழ்நாள் முழுவதும் தேசநலனுக்காகவும், தர்மத்திற்காகவும், பா.ஜ.க.வின் வளர்ச்சிக்காகவும் உழைத்த பெரியவர் இல.கணேசன், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது நம் தமிழக பா.ஜ.க.வில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த கவுரவம் ஆகும்.
பாராளுமன்றத்தில் அவருடைய செயல்பாடு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பேருதவியாக அமையும் என்பதோடு பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்பதில் திடமான நம்பிக்கை உண்டு. இல.கணேசனுக்கு தமிழக மக்கள் சார்பிலும், என் சார்பிலும் வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.