தரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக.. நாராயணசாமி கண்டனம்
தரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக என்று நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
புதுச்சேரி : தரம் தாழ்ந்த கருத்துகள் மூலம் அரசியல் செய்ய பாஜகவினர் நினைக்கிறார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி சேகரின் பதிவுக்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதுகுறித்து அரசியல் கட்சியினர் எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.வி சேகர் மீது முறையான கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.வி சேகரின் கருத்து எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. தரம் தாழ்ந்த கருத்துகளின் மூலமே அரசியல் செய்ய பாஜகவினர் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.