கட்சித் தலைமை பற்றி கவலையில்லை: கர்நாடக ஆளும் காங்கிரஸுக்கு எதிராக வரிந்து கட்டும் புதுச்சேரி அரசு
கட்சித் தலைமை பற்றி கவலைப்படவில்லை, கர்நாடக அரசை கண்டித்து நாளை நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு புதுவை காங்கிரஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை: கட்சி தலைமை பற்றி கவலையில்லை, எங்களுக்கு விவசாயிகள் நலன்தான் முக்கியம் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நாளை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பந்த் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு புதுவை திமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி. இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களுடைய கட்சி தலைமை என்ன சொன்னாலும் கவலையில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது ,நாங்களும் காங்கிரஸை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட எங்களுக்கு புதுவை மாநில விவசாயிகளின் நலன்கள்தான் முக்கியம்.
அதற்கு எந்த தியாகத்தையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் கட்சி தலைவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாளை திமுக அழைப்பு விடுத்துள்ள பந்த் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு என்றார் நாராயணசாமி.