நடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் திடீர் இடமாற்றம்!
சென்னை: குடிபோதையில் ஆடி காரை ஓட்டி வந்து போலீஸ் வாகனம் மீது மோதி நடிகர் அருண் விஜய் விபத்தை ஏற்படுத்திய வழக்கை விசாரித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையை சீர்குலைத்து அருண் விஜய்யைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கையா இது என்று பொதுமக்கள் மத்தியில் பேச்சு கிளம்பியுள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய் பின்னர் வீடு திரும்பினார்.
அப்போது, தனது ஆடி காரில் அதிவேகமாக வந்த அவர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் எதிரே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் இல்லை. ஆனால் போலீஸ் வாகனம் சேதமடைந்தது.
போலீஸ் விசாரணையில் அருண் விஜய் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அருண் விஜய்யின் தந்தை நடிகர் விஜயக்குமாருக்குத் தகவல் போய் அவர் விரைந்து வந்தார்.
அருண் விஜய் மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் அருண் விஜய் மீது, மோட்டார் வாகனச் சட்டம்- 185-வது பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 279-வது பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து அருண் விஜய்யை கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் பிடியலிருந்து தப்பி விட்டார் அருண் விஜய். உடனடியாக சரணடைய அவருக்குப் போலீஸார் கெடு விதித்துள்ளனர்.
இந்த நிலையில், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருண் விஜய் வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை உடைக்க நடக்கும் முயற்சியா இது என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.