சங்கராச்சாரியார் விடுதலைக்கு எதிர்ப்பு... சங்கரராமன் வழக்கில் மேல்முறையீடு- புதுவை அரசு முடிவு
புதுவை: சங்கராச்சாரியார் விடுதலையை எதிர்த்து ஹைகோர்ட்டில் அப்பீல் செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் தனது அலுவலகத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயந்திரர், விஜயேந்திரர், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கராச்சாரியார்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இதில் ரவிசுப்பிரமணியம் அப்ரூவரானார். இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.
தமிழ்நாட்டில் வழக்கு நடந்தால் நீதி கிடைக்காது எனவே வேறு மாநில கோர்ட்டில் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று சங்கராச்சாரியார்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கடந்த 2005ம் ஆண்டு வழக்கு புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
நீதிபதிகள்...
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கை, நீதிபதிகள் சின்னப்பாண்டி, கிருஷ்ணராஜா, ராமசாமி மற்றும் முருகன் ஆகியோர் விசாரித்தனர்.
கதிரவன் படுகொலை...
இதற்கிடையே, கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கதிரவன் படுகொலை செய்யப்பட்டார். மற்ற 24 பேர் மீது விசாரணை நடந்துவந்தது.
சாட்சிகள்...
இவ்வழக்கில் மொத்தம் 187 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அதில் சங்கரராமன் மனைவி பத்மா உள்பட 82 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
விடுதலை...
இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார். அதில், இந்த கொலை வழக்கில் சங்கராச்சாரியார் மற்றும் உள்ளவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடாததால் அனைவரையும் விடுதலை செய்து அவர் உத்தரவிட்டார்.
மவுனம் காத்த புதுவை அரசு...
புதுவையில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்பாக அந்த அரசு தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால், கடந்த ஆறேழு மாதமாக புதுவை அரசு மவுனம் காத்து வந்தது.
மேல்முறையீடு...
இந்நிலையில் தற்போது திடீரென புதுவை அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக கவர்னர் வீரேந்திர கட்டாரியா, புதுவை அரசு சிறப்பு வக்கீல் தேவதாசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சங்கரராமன் கொலை வழக்கு சம்மந்தமாக ஹைகோர்ட்டில் அப்பீல் செய்ய நடவடிக்கை எடுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
உத்தரவு நகல்கள்...
எனவே விரைவில் வக்கீல் தேவதாஸ் மேல் முறையீடு செய்ய உள்ளார். இது தொடர்பாக வக்கீல் தேவதாசிடமிருந்து, தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் உத்தரவு நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன.