10 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.300: புதுவை முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பத்து கிலோ இலவச அரிசிக்கு பதிலாக 300 ரூபாய் பணமாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி, 'இந்த மாதம் முதல் 10 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாத மாதம் 300 ரூபாய் பணமாக கொடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியாங்களில் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர் குடும்ப அட்டைதாரரின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு மாதம் ரூ.9 கோடி செலவாகும் என்றும் ரங்கசாமி கூறினார். பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு வரும் மார்ச் மாதம் முதல் லேப்டாப் வழங்கப்படும்,' என்றும் ரங்கசாமி அறிவித்தார்.
எதிர்கட்சிகள் புகார்
இலவச அரிசி திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பியதை அடுத்து இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரங்கசாமி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 40 மாதங்களில் 8 மாதங்களுக்கு மட்டுமே அரிசி வழங்கியுள்ளது, அதுவும், பெரும்பாலும் தரமில்லாத அரிசியைத்தான் அரசு கொடுத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
அனைத்து அட்டைத்தாரர்களுக்கும் அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும். பணமாக வழங்குவதன் மூலம் முறைகேடுகள் குறையும். மேலும் பத்து கிலோ அரிசியை முழுமையாக மக்கள் தாங்களே வெளிகடைகளில் இந்த பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்ளமுடியும். இதனால் நியாயவிலை கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் ஒழிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இலவச அரிசிக்கு பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் ரங்கசாமி.