இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தனாவது வர மாட்டான்?... வருவான்!
புதுவை: புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதரின் கார் டிரைவரிடம் போலீஸ்காரர் ஒருவர் லஞ்சம் வாங்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலாத் தளங்களில் ஒன்றான புதுச்சேரிக்கு தினமும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகளாக வந்து செல்கின்றனர். இதனால் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களைத் தாராளமாக அங்கு அதிகளவில் பார்க்க முடியும்.
அவ்வாறு வரும் வாகனங்களிடம் ஏதாவது காரணங்களைக் கூறி போலீசார் வசூல் வேட்டை நடத்தி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன்குமாரின் கார் டிரைவரிடமும் லஞ்சம் வாங்கப்போய் தற்போது அங்கு போலீஸார் பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதராக பதவி வகித்து வருகிறார் மோகன்குமார். இதற்கு முன்னர் பஹ்ரைன் நாட்டுக்கான தூதுவராக பதவி வகித்த இவர் ஒரு தமிழரும் கூட. இவர் நேற்று முன்தினம் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க வந்திருந்தார்.
இதற்காக முதல்நாள் இரவே வந்து கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். அப்போது அவரது தமிழக பதிவு எண்ணைக் கொண்ட கார் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. இரவு நேர ரோந்துப் பணிக்காக வந்த போலீஸ்காரர் ஒருவர், அவரது காரைப் பார்த்து டிரைவரிடம் லைசன்ஸ், ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளார்.
டிரைவரும் அனைத்து ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனாலும் சமாதானம் ஆகாத போலீஸ்காரர், ‘இது நோ பார்க்கிங் ஏரியா' எனக் கூறி, பைன் போட்டால் அதிகம் ஆகும் எனக் கூறி டிரைவரிடம் பேசி ரூ. 500ஐ பிடுங்கி விட்டார்.
மறுநாள் காலையில் இந்த சம்பவங்களை இந்தியத் தூதரிடம் சொல்லியிருக்கிறார் டிரைவர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், புதுவை போலீஸ் உயரதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு பதறிப்போன அவர்கள், உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மோகன் குமாரிடம் உறுதி அளித்துள்ளாராம்.
இந்திய அரசின் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கே இந்த கதி என்றால் சாமானிய மக்களின் கதியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதையெல்லாம் தட்டிக் கேட்க யாராவது வர மாட்டாங்களா.. வருவான்!