புக் பிரியர்களே ஏமாற்றம் வேண்டாம்.. பொங்கல் புத்தகத் திருவிழா 10 நாட்களுக்கு!
சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்கி, அடுத்த பத்து நாட்களுக்கு பொங்கல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் செய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வந்தாலே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி திருவிழா போல் களைகட்டத் தொடங்கி விடும். மாநிலம் முழுவதும் உள்ள புத்தகப் பிரியர்களும் வேடந்தாங்கலில் கூடும் பறவைகள் போல அங்கு மொய்க்கத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால், இந்தாண்டு மழை, வெள்ளம் என கடந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னைவாசிகளை அகதிகளாக மாற்றி விட, புத்தகக் கண்காட்சி நடைபெறவில்லை. ஏப்ரல் மாதத்திற்கு புத்தகக் கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இதனால், சற்று ஏமாற்றமடைந்திருந்த வாசகர்களுக்கு காதில் தேன் வார்க்கும் செய்தியாக கிடைத்துள்ளது சென்னைப் புத்தகத் திருவிழா.
வெள்ளத்தால் பாதிப்பு...
கடந்தமாதம் பெய்த கனமழை, அதனைத் தொடர்ந்து வெள்ளம் என கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் பெரிய பதிப்பாளர்கள் முதல் சிறிய பதிப்பாளர்கள் வரை அனைவரும் பெரும் பாதிப்படைந்தனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 25 லட்சம் புத்தகங்கள் நாசமாகின.
பதிப்பாளர்கள்...
இதில், புத்தகக் கண்காட்சியும் தள்ளி வைக்கப்பட்டதால் அவர்களது வியாபாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏனெனில் சிறிய பதிப்பாளர்களின் 60 சதவீத புத்தக விற்பனை புத்தகக் கண்காட்சி மூலமே நடைபெறுகிறது.
தயார் நிலையில் புத்தகங்கள்...
இந்தப் புத்தகக் கண்காட்சியில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பதிப்பகத்தாரும் பங்கேற்பர். எனவே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் உள்ள பதிப்பகத்தார் ஏற்கனவே லட்சக்கணக்கில் புத்தகங்களை கண்காட்சிக்காக அச்சடித்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
வியாபாரம் பாதிப்பு...
இந்த சூழ்நிலையில் புத்தகக் கண்காட்சி தள்ளி வைக்கப்பட்டதால் அவர்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள புத்தகங்களை வைத்துக் கொண்டு அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
பொங்கல் புத்தகத் திருவிழா...
எனவேதான், புத்தகப் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், பதிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பொங்கல் புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை தொடக்கம்...
நாளை முதல் இம்மாதம் 24ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்தப் பொங்கல் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் செய்து வருகிறது.
வியாபாரம் மந்தம்...
இதுமட்டுமின்றி, ஏப்ரல் மாதத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றால் வியாபாரம் மந்தமாகவே இருக்கும் என்பது பதிப்பாளர்களின் கருத்து. காரணம் பள்ளித் தேர்வுகள், அதனைத் தொடர்ந்து கோடை விடுமுறை என மக்கள் வெளியூர்களுக்கு கிளம்பத் தொடங்கி விடுவர்.
குறுகிய காலத்தில்...
வழக்கமாக புத்தகக் கண்காட்சிக்கு 6 மாதங்கள் முன்கூட்டியே பதிப்பாளர்கள் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கி விடுவர். ஆனால், இந்தாண்டு 15 தினங்களிலேயே தயாராக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
ஜனவரினாலே...
ஆனபோதும் ஜனவரி மாதத்தில் பொங்கலைப் போலவே புத்தகக் கண்காட்சியும் பிரதான திருவிழா போல் ஆகிவிட்டதால், அதனை நடத்தியே தீருவது என அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நுழைவுக் கட்டணம் வெள்ளநிவாரண நிதிக்கு...
இந்தப் புத்தகத் திருவிழாவில் 220 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. நுழைவுக் கட்டணம் 5 ரூபாய் ஆகும். இதில் வசூலாகும் பணம் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்பட உள்ளது.
தொடக்கவிழா...
ஜனவரி 13 மாலை 6 மணியளவில் நடைபெறும் விழாவில், மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார். நீதிபதி சந்துரு, ‘இந்து' என்.ராம், இரா.முத்துக்குமாரசாமி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
கலை நிகழ்ச்சிகள்...
புத்தக விற்பனை மட்டுமின்றி தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், நூல் வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எழுத்தாளர்களின் உரை...
15-ம் தேதி சுகி சிவம், ச.தமிழ்ச்செல்வன், 16-ம் தேதி எஸ்.ராமகிருஷ்ணன், மருத்துவர் கு.சிவராமன், ‘சீன வானொலி' கலைமகள், 17-ம் தேதி ஸ்டாலின் குணசேகரன், சு.வெங்கடேசன், நாகை முகுந்தன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். 18-ம் தேதி ஈரோடு தமிழன்பன் தலைமையில் கவியரங்கம், 19-ம் தேதி நடிகர் பொன்வண்ணன், வழக்கறிஞர் அஜிதா, 20-ம் தேதி பேரா.ராமானுஜம், 21-ம் தேதி பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், 22-ம் தேதி பேரா.அருணன், மை.பா.நாராயணன், 23-ம் தேதி பிரபஞ்சன், இரா.நடராசன், நடிகை ரோகிணி, ‘குற்றம் கடிதல்' பிரம்மா உள்ளிட்டோர் உரையாற்ற இருக்கிறார்கள்.