தைப் பொங்கலும் வந்தது... காரைக்குடியில் களை கட்டிய பொங்கல் விழா!
காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் தைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா 11.01.16 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு காரைக்குடி நகராட்சி ஆணையாளர் பெ. விஜயலக்ஷ்மி அவர்கள் தலைமையேற்றார். காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் வட்டாரத் தலைவர் அரிமா. சா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர். மு.சு.கண்மணி விழா பேருரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரை
கார்த்திகேயன் பள்ளி ஆசிரியை பா. லெட்சுமி, கவிஞர் பாரி. முடியரசனார், கவிஞர். எழில் வேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
புகையில்லா போகி
காரைக்குடி நகராட்சி ஆணையாளர் தனது வாழ்த்துரையில், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடுவதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கி, தூய்மையின் முக்கியதுவத்தை எடுத்துக் கூறினார்.
சமத்துவப் பொங்கல்
இவ்விழாவையொட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் செய்து சமத்துவப் பொங்கலை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். மாணவர்கள் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடனும், மாணவிகள் பட்டு பாவடையுடனும், ஆசிரியர்களும் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழர் திருநாளின் சிறப்பு
மாணவர்கள் தமிழர் திருநாளின் சிறப்பு குறித்து நாட்டுப்புறபாடல் பாடியும், நடனம் ஆடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். மாணவர்களுக்கு ஊசி நூல் கோர்த்தல் போட்டி, சாக்கு போட்டி, நீர் நிரப்புதல் போட்டி, பலூன் உடைத்தல் போட்டி, உருளைக்கிழங்கு சேகரித்தல் போட்டி, லக்கி கார்னர் போட்டி, உரி அடித்தல் போட்டி, கோலப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
விதம் விதமான போட்டிகள்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்களை பட்டதாரி ஆசிரியர் திருமதி. சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
சிறப்பான ஏற்பாடுகள்
காரைக்குடி கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கம் செயலாளர் அரிமா. எஸ். இராமநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் கோமதி செய்திருந்தனர்.