தை திருநாள் - தமிழகம் முழுவதும் பொங்கல் கோலாகல கொண்டாட்டம் - ஜல்லிக்கட்டு படுஜோர்
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: உழவர் திருநாளாம் அறுவடைத்திருநாள் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று, குடும்பத்துடன் காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து வீட்டில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு பருவமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் உழவர்கள் உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியபகவானை வணங்கினர்.
நாளை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். அன்று, உழவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகள், உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி, பூஜை செய்வார்கள். அன்று, தமிழர்களின் வீர விளையாட்டான மாடு பிடித்தல் போட்டிகளும் பெரும்பாலான ஊர்களில் நடைபெறும்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. நாளை 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். காளைகளும், மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர்.