சென்னையில் பொங்கல் புத்தகத் திருவிழா - ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது
சென்னை: பொங்கல் புத்தகத் திருவிழா சென்னையில் வரும் ஜனவரி 13 அன்று துவங்கி ஜனவரி 24ஆம் தேதி வரை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 13 அன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறும்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமை தாங்குகிறார். மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால் கிருஷ்ண காந்தி தொடங்கி வைக்கிறார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவர் இரா.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புத்தகத் திருவிழாவில் சமீபத்திய "சென்னை வெள்ளம்" குறித்த புகைப்படக் கண்காட்சியும், தமிழகத்தில் உள்ள "புகழ்பெற்ற நூலகங்கள்" குறித்தக் கண்காட்சியும் இடம்பெறும்.
புத்தகத் திருவிழா குறித்த முழுமையான விவரங்களை இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட chennaibookfair.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதில் பங்கேற்கும் அரங்குகள் விவரம் எங்கு எந்த புத்தகம் கிடைக்கும் என்ற தேடல் வசதி, புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருவதற்கான வரைபடம், அரங்கின் வரைபடம் இடம்பெறும். வருகைதரும் வாசகர்கள் பரிசுபெற QR CODE ஸ்கேன் செய்து பதிவு செய்யும் முறையும் இருக்கும்.
அனைத்து புத்தகப் பதிப்பாளர்களும் தங்கள் அரங்கிலேயே புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதனால் திருவிழாவிற்குள் ஒரு தனி திருவிழா ஆங்காங்கே நடைபெறும்.
50 அரங்குகளுடன் கூடிய இந்த புத்தகத் திருவிழாவில் வாசகர்கள் வந்து பார்வையிட விசாலமான பாதைகள், நவீன தொழில்நுட்ப முறையிலான கழிப்றைகள், உணவு வளாகம், வயதானவர்கள் ஓய்வெடுக்க அங்காகே இருக்கை வசதிகள், மாற்றுத் திறனாளிகள் பார்வையிட விசேச வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நுழைவுக் கட்டணமாக 5 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தொகை முழுவதும் முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று மேற்கண்ட விபரங்களை தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.