பொங்கல் பரிசில் அரிசி, வெல்லம், கரும்பு இருக்கு... ரூ. 100 இல்லையே- பொதுமக்கள் ஏமாற்றம்
தமிழக அரசு இந்த ஆண்டு ரேசன் கடைகளில் கொடுக்கும் பொங்கல் பரிசு பொருட்களில் கூடுதலாக திராட்சை, முந்திரி கொடுக்கப்பட்டாலும் ரூ. 100 ரொக்கம் கொடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை: பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் 2 அடி கரும்புத்துண்டு ஒன்றும் பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டன.
சென்னை தலைமை செயலகத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத்துறைகளின் கீழ் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததும், நேற்று மாலை முதலே நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுப் பை விநியோகம் தொடங்கியது.
பொங்கல் பரிசு பொருட்கள்
அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் வடசென்னையின் சில பகுதிகளில் மட்டுமே நேற்று பொங்கல் பரிசு வினியோகம் நடந்தது. இன்று முதல் அனைத்து ரேசன்கடைகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.
திமுக ஆட்சி காலத்தில்
தமிழகத்தில் உள்ள அரிசி வாங்குவோர், காவலர், இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் வசிப்போர் என ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
ரூ. 100 ரொக்கம், கரும்பு
அதன்பின் அதிமுக ஆட்சியில் வெல்லம், பாசிப்பருப்பு போன்ற பொருட்கள் நிறுத்தப்பட்டு அதற்கு பதில் ரூ.100 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ரூ.100 ரொக்கப் பரிசுடன் கூடுதலாக இரண்டு அடி நீள கரும்பும் வழங்கப்பட்டது.
கரும்பு இருக்கு பணமில்லையே
இந்த ஆண்டு ரேசன் கடைகளில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி,திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புதுண்டு ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால் 100 ரூபாய் ரொக்கப்பணம் கொடுக்கவில்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ரேசன்கடைகளில் விநியோகம்
இத்திட்டத்துக்கான பச்சரிசி, சர்க்கரை ஏற்கெனவே பொது விநியோக திட்டத்தில் உள்ளதால், அப்பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் உள்ளன. மற்ற பொருட்களான முந்திரி, திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்ற அளவில் வழங்கப்பட்டது. அதேபோல கரும்பும் கூட்டுறவுத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இத்தொகுப்பு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளது.
கரும்பு டேஸ்டா இருக்கா?
ரேசன் கடைகளில் மணிக்கணக்கில் நின்று பொருட்களை வாங்கிய கையோடு கரும்பை கடித்து ருசித்து சுவைத்தனர் சில பெண்கள். இந்த கரும்பு டேஸ்டா இல்லையே என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டனர். எப்படியோ பொங்கல் பரிசு வாங்கிய மகிழ்ச்சியோடும், 100 ரூபாய் இல்லையே என்ற ஏக்கத்தோடும் பெண்கள் பலரும் கலைந்து சென்றதை காண முடிந்தது.