உழவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் நாள்: விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து
சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமாக தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் அனைவரின் தனித்த பண்பாடுகளை, பாரம்பரியத்தை பாதுகாப்பதன் மூலமே பன்முக பண்பாட்டை பாதுகாக்க முடியும். தமிழ் மக்கள் அனைவரது உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சிப் பொங்கட்டும். சமூக விழாவாக விளங்குகிற பொங்கல் திருநாளில் தமிழ் சமூகத்திற்கு இனி வரும் காலம் இனிப்பூட்டும் காலமாக இருக்கட்டும் என தலைவர்கள் தங்களின் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
பொங்கல் திருநாளிலிருந்தாவது எதிர்வரும் காலங்களில் தமிழக மக்கள் தங்களின் கஷ்டங்கள் நீங்கி வாழ வேண்டும். மக்களின் நலன் விரும்பும் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். வெகு விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவு, தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்கும் வகையில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்
நமது வாழ்க்கையில் எத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் பொங்கல் திருநாள் என்பது மகிழ்ச்சியோடு கொண்டாடுவதும், நாம் வணங்கிப் போற்றுகிற மாடுகளை வணங்குவதும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். அந்த வகையில் பல்வேறு இன்னல்களுக்கிடையே அனைவரும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவை பெருமளவில் நடந்த நிலையில், கார்ப்பரேட் பெருநிறுவனங்களும், வசதி படைத்தவர்களும் நீர்நிலைகள், நீர் போக்குவரத்துக்கான வழிகளை வகைதொகையின்றி ஆக்கிரமித்து வருகின்றனர். இதனுடைய விளைவை அண்மையில் பெய்த பெருமழையின்போது தமிழகம் அனுபவித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்தனர். நீர்நிலைகளை உரிய முறையில் பராமரிப்பதன் மூலமே நீராதாரத்தை பாதுகாப்பதோடு, இயற்கை பேரிடர்களையும் சமாளிக்க முடியும். பொங்கல் திருவிழா இயற்கையோடு மனித சமூகத்துக்குள்ள உறவை உணர்த்துவதாகவும், புதிய நம்பிக்கையை பெறும் நாளாகவும், இந்த தை திருநாள் விழா அமைந்துள்ளதாக கூறினார். சமூக விழாவாக விளங்கும் பொங்கல் திருநாளில், தமிழ் சமூகத்திற்கு இனி வரும் காலம் இனிப்பூட்டும் காலமாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.கே.வாசன் வாழ்த்து
உலகெங்கும் இருக்கும் தமிழக மக்களுக்கு, மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் பொங்கல் நாள் முதல் மக்களின் துயரங்கள் மறையட்டும் எனவும், மகிழ்ச்சி மலரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக மேற் கொண்ட நடவடிக்கைகளால் இயற்கையின் எதிர் நடவடிக்கைகளுக்கு நாம் ஆளாகிட வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியுள்ளோம். புதுப்பானையிட்டு, புது அரிசி இட்டு பொங்கலைக் கொண்டாடும் இந்நாளில் வினாக்களுக்கு விடை காணவும், புதியதோர் தமிழகம் படைத்திட பொங்கல் நாளில் பொங்கி எழுவோம்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
தமிழனுக்குரிய அடையாளங்களை நாம் என்றுமே இழந்து விடக் கூடாது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு தொடர்ந்து நடைபெறச் செய்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இடையில் ஏற்பட்ட தடைகளை தகர்த்திட வேண்டும். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்
கூடிவாழ்தல், கூடி உழைத்தல், கூடி மகிழ்ந்தல் என்னும் கூட்டுறவு பண்பாட்டை கொண்டாடும் பேரினம் தமிழினம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் நன்சிறர்மார்ந்த நேய கோட்பாட்டை உலக அரங்கில் உயர்த்தி பிடிக்கும் பெருமைக்குரிய தேசிய இனம் தமிழனம். இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு விழ மியங்களை பிற்போக்கு சக்திகளிடம் இருந்து மீட்கவும் பாதுகாக்கவும் தைத் திருநாளில் உறுதியேற்போம்.
மேலும் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர், திராவிட மனித சங்கிலி நிறுவனர் டாக்டர் செங்கை பத்மநாபன் ஆகியோரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.