தமிழர் பண்பாட்டு விழா பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது பெரும் அதிர்ச்சி - சசிகலா
பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் பொங்கலுக்கு கட்டாயம் விடுமுறை நாள் இல்லை என அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது பொங்கல் பண்டிகை. இந்த பண்டிகையை முன்னிட்டு கட்டாய விடுமுறை இதுவரை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இனி மேல் பொங்கல் பண்டிகைக்கு நாடு முழுவதும் கட்டாய விடுமுறை கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக் கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகையொட்டி மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையை பெற முடியாது நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் விடுமுறை தினத்தை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் விடுமுறையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - சின்னம்மா.
— AIADMK (@AIADMKOfficial) January 9, 2017
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் சிறந்த பண்டிகை. பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையாக இருந்த நிலையில் தற்போது விருப்ப விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது எனவும் சசிகலா கூறியுள்ளார்.