பொங்கல் விடுமுறையில் தண்ணீலயே மிதந்தாங்களா 'குடிமகன்கள்'?... டாஸ்மாக் சேல்ஸ் ரூ.219 கோடி!
பொங்கல் பண்டிகையின் போது மதுபான விற்பனை இதுவரை இல்லாத அளவில் ரூ. 219 கோடி அளவிற்கு விற்பனையாகியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபான விற்பனை இதுவரையில் இல்லாத அளவு ரூ. 219 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 15 கோடி அதிகமாகும்.
ஒவ்வொரு பண்டிகையின் போது தமிழகத்தில் எதில் முன்னேற்றம் வருகிறதோ இல்லையோ, டாஸ்மாக் மதுபான விற்பனை புதுப்புது வரலாறுகளை படைத்துள்ளது. தீபாவளி, புத்தாண்டு என்றாலே டாஸ்மாக்குகளில் கூட்டம் அள்ளிவிடும், அரசுக்கும் கல்லா கட்டிவிடும்.
இதே போன்று இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை டார்க்கெட் கடந்த ஆண்டைவிட அள்ளிவிட்டதாம். இதுவரையில்லாத அளவு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது சுமார் ரூ.219 கோடி அளவிற்கு விற்பனையை அள்ளியுள்ளனவாம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள். இது கடந்த ஆண்டை விட ரூ. 15 கோடி அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பீர் விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடந்த விற்பனையை ஒப்பிட்டு பார்க்கும் போது பீர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, ஆனால் விஸ்கி, பிராண்டி உள்ளிட்ட மதுபானங்களின் விற்பனையானது 2 முதல் 3 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட அதிகம்
பொங்கல் நாளன்று ரூ. 127 கோடிக்கும், போகி பண்டிகை நாளன்று ரூ. 92 கோடிக்கும் மதுபான விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கலின் போது ரூ. 204 கோடி அளவிற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் புதிய உச்சத்தை இந்த ஆண்டு டாஸ்மாக் விற்பனை தொட்டுள்ளது. கடந்த ஆண்டை விட மதுபான பாட்டில்கள் குறைந்த அளவே விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், வருவாய் அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் மதுபான பாட்டில்களின் விலை உயர்வு என்கின்றனர் டாஸ்மாக் அதிகாரிகள்.
எங்கெங்கு அதிக விற்பனை?
வடசென்னை பகுதியில் 35 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அந்தப் பகுதியில் விற்பனையானது 10 சதவீதம் குறைந்துள்ளது, மற்றபடி வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பொங்கல் டாஸ்மாக் சேல்ஸ் அதிக அளவில் இருந்துள்ளது. புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் நல்ல விற்பனை நடந்துள்ளது.
சட்டவிரோத மது விற்பனை
தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையில் நுழைவுவாயில் பகுதிகளிலும் டாஸ்மாக் விற்பனை பொங்கல் விடுமுறை நாட்களில் அதிக அளவில் இருந்துள்ளது. இதனிடையே திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் ஷெனாய் நகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட ரெய்டில் 912 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.