திரும்பிய இடத்தில் எல்லாம் அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து இருக்கிறது: பொன்முடி காட்டம்
திரும்பிய இடத்தில் எல்லாம் அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
தர்மபுரி: அதிமுகவின் இந்த ஆட்சியில் எந்த திரும்பிய இடத்தில் எல்லாம் ஊழல் நிறைந்து இருக்கிறது என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் திரும்பப்பெற கோரியும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் சார்பில் தர்மபுரி வள்ளலார் திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்திற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார்.
கருணாநிதியின் ஆட்சி
அவர் பேசுகையில், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில் 75 கி.மீட்டருக்கு மேல் இயங்கும் பேருந்துகள் தேசிய மயமாக்கப்பட்ட விரைவு பேருந்துகள் என்று அறிவிக்கப்பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி, போக்குவரத்து கழகங்கள் உருவாக்கிப் பல்வேறு பெயர்களில் போக்குவரத்து கழகங்கள் நிறுவினார். தனியார் பேருந்துகள் இருக்கக் கூடாது என்கிற சட்டத்தையும் கொண்டு வந்தார்.
போக்குவரத்துத்துறை சேவைத்துறை
அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொடர்ந்து பேருந்து கட்டணங்கள் அதிகரித்து வந்து இருக்கின்றன. அவர் இல்லாத இந்த ஆட்சியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. போக்குவரத்து துறை என்பது கல்வி துறை, உணவுதுறை போன்று ஒரு சேவை துறை என்பதையே இவர்கள் மறந்துவிட்டார்கள் என்று விமர்சித்தார்.
சட்டசபையில் ஜெயலலிதா படம்
மேலும், சட்டசபையில் ஒரு முதலமைச்சரின் படத்தை திறக்கவேண்டும் என்றால் பிரதமர், குடியரசுதலைவர், கவர்னர், இவர்களில் ஒருவரை அழைத்து படத்தை திறப்பது மரபு. ஆனால் மறைந்த ஜெயலலிதா ஊழலில் முதல் குற்றவாளியாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், தற்போதைய அ.தி.மு.க. அரசு அழைத்தும் அவர்கள் படத்தை திறக்க வரமறுத்து விட்டனர். இதனால் சபாநாயகரை வைத்து ஜெயலலிதாவின் படத்தை திறந்து இருப்பது சபையின் மரபு மீறிய செயலாகும்.
போக்குவரத்துத்துறையில் ஊழல்
இந்த ஆட்சி சத்துணவு துறையில் இருந்து பல்கலைக்கழகம் வரை பேரம் பேசும் ஆட்சியாகதான் இருந்து வருகிறது. இலவச பஸ்பாஸ், பெண்களுக்கு முன்னுரிமை, முதியோர்களுக்கு சலுகை, கிராம புறங்களுக்கு பேருந்து போக்குவரத்து போன்ற காரணங்களால் போக்குவரத்துதுறைக்கு நஷ்டம் வரத்தான் செய்யும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசே மானியம் வழங்க வேண்டுமே தவிர மக்கள் தலைமீது சுமையை ஏற்றி வைக்கக்கூடாது. போக்குவரத்து துறையில் உள்ள ஊழலை குறைத்தாலும் நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கலாம். பஸ் கட்டணத்தை உயர்த்த அவசியம் இல்லை. அதை இந்த அரசு உணர்வதாகத் தெரியவில்லை என்று பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.