நாடே காரிதுப்பும் அளவிற்கு தினகரன் செயல் உள்ளது - பொன்னையன்
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியை மேற்கொண்டதற்கு கிடைத்த தண்டனையாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தினகரனின் செயல் நாடே காரிதுப்பும் அளவிற்கு உள்ளது என்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி குற்றவியல் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தினகரனுக்கு உதவியாக இருந்த அவரது நண்பரான பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு நாட்களாக நடந்த விசாரணைக்கு பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர் பொன்னையன், இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியை மேற்கொண்டதால் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடே காரிதுப்பும் அளவிற்கு தினகரன் செயல் உள்ளதாகவும் அதிமுகவை சிதைத்தது சசிகலாவும், தினகரனும் தான் எனவும் பொன்னையன் கூறியுள்ளார்.