ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் கொடுத்து தீர்த்து கட்டியது சசிகலா குடும்பம்.. பொன்னையன் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் கொடுத்து தீர்த்து கட்டியது சசிகலா குடும்பத்தினர் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம்: ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை தீர்த்து கட்டிவிட்டது சசிகலா குடும்பம் என்று பொன்னையன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே அரை மயக்கத்தில்தான் இருந்தார்.
ரத்த அழுத்தம்
அவரது சர்க்கரை அளவு 500-க்கும் மேலும், ரத்த அழுத்தம் அதிகரித்தும் காணப்பட்டது. மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 48 சதவீதமாக இருந்ததால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று இருந்தது.
ஒப்புக் கொண்ட அப்பல்லோ
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தவரை காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என்று மட்டுமே கூறிவந்த அப்பல்லோ ஓராண்டு கழித்து ஒப்புக் கொண்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஜெ.இறந்தது எப்போது
இந்நிலையில் மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா சகோதரன் திவாகரன் கூறுகையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒரு நாள் தாமதமாக வெளியிட்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஜெயக்குமார் மறுத்தார்.
ஜெ.வுக்கு ஸ்டீராய்டு
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் ஸ்டீராய்டு எனும் விஷத்தை சசிகலா குடும்பம் கொடுத்துவிட்டது.
சர்க்கரை அளவு அதிகரிப்பு
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து 8 மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. இதனால் அவரது சர்க்கரை அளவு 500, 560 என எகிறியுள்ளது. மேலும் நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஸ்டீராய்டுகள் என்பது மெல்ல கொல்லும் விஷமாகும். இதை தொடர்ந்து உட்கொள்ள கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சசிகலா குடும்பத்தினர் வேண்டுமென்றே இதை கொடுத்து ஜெயலலிதாவை தீர்த்து கட்டிவிட்டனர்.
உண்மைகள் வெளியே வரும்
ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் வழங்கப்பட்டது குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று திவாகரன் கூறியதன் மூலம் உண்மைகள் வெளிவருகின்றன என்றார் பொன்னையன்.