பொங்கல் விழாவை "மோடி பொங்கலாக" கொண்டாடுங்கள்... சொல்வது பொன்னார்
சென்னை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுத்தவர் பிரதமர் மோடி என்பதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பொங்கல் விழாவை 'மோடி பொங்கலாக' கொண்டாடுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அரசாணை வெளியாகும் என்று நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதன்படி, அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டு பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க நினைத்தார்கள். ஆனால், அதனை முழுமையாக பெற்று தந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு போட்டி எப்படி நடத்தப்பட்டதோ, அதே போன்று இனி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியும்.
விலங்குகள் ஆர்வலர்கள் தமிழ் சமுதாயத்தின் உணர்வுகனை புரிந்து கொள்ளுங்கள். தமிழ் சமுதாயம், பசுவுக்கும், காளைக்கும், கன்றுக்கும் குடும்ப உறுப்பினர்களை போன்று மரியாதை கொடுக்கும் சமுதாயம்.
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஜல்லிக்கட்டை கொண்டு வந்துள்ளார். இதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உலக தமிழர்கள் அனைவரும் பொங்கல் விழாவை மோடி பொங்கலாக கொண்டாடுங்கள்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.