மறக்க முடியுமா? கருணாநிதியின் கரு 'மை' பிரசவித்த பராசக்தி, பூம்புகார் பட வசனங்களை!
அரசியலில் சாதித்த திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையிலும் தனது வசனங்களால் முத்திரை பதித்துள்ளார்.
சென்னை: அரசியலில் சாதித்த திமுக தலைவர் கருணாநிதி திரைத்துறையிலும் தனது வசனங்களால் முத்திரை பதித்துள்ளார்.
கருணாநிதியின் வசனங்கள் சமூக அவலங்களை சுட்டிக்காட்டுபவையாகவும் அநீதிக்கு எதிரான சாட்டையாகவும் இருந்துள்ளன. ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கருணாநிதி.
அதில் சிவாஜி நடிப்பில் வெளியான பராசக்தி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் நீதிமன்ற வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.
ஓடினாள்.. ஓடினாள்..
பராசக்தி படத்தில், கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் அந்த வசனம், "ஓடினாள், ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்". "என் செயலை சுயநலம் என்பீர்கள், ஆம்.. சுயநலம்தான். ஆகாரத்திற்காக அழுக்கைத் தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன். அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது'‘
கூடாரமாகிவிடக்கூடாது..
கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" உள்ளிட்ட வசனங்கள் கருணாநிதிக்கு பெரும் புகழ் பெற்றுத்தந்தது. சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் கூட இந்த வசனத்தை மையமாக வைத்து வீடியோக்கள் வெளியானது நினைவு கூறத்தக்கது.
பொங்கியெழு..
இதேபோல் மனோகரா படத்தில் பொறுத்தது போதும்...பொங்கியெழு' என்கிற தாய் கண்ணாம்பாவும், ‘என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" சிவாஜி கலைஞரின் வசனத்தோடு போட்டி போட்டு நடித்திருப்பார். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கசையடி.
கண்ணகியை கண்ணெதிரே
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியையும் கண்ணெதிரே கொண்டுவந்து சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் கருணாநிதிதான் என்று கூறினால் அது மிகையல்ல. ஆம் கோவலன் - கண்ணகியின் கதையை உரைக்கும் பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி.
வல்லான் வகுத்ததே நீதி
தனது கணவனை கொலை செய்ய ஆணையிட்ட அரசரை கண்ணகி கூனிகுறுக செய்யும் அந்த வசனங்கள் காலத்தால் அழியாத காவியங்கள்.யார் கள்வன்? என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர். நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி.
செங்கோல் எதற்கு?
இதுகோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை. இது கோவலன்தேவியின் சிலம்பு. நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? வெண்கொற்றக் குடை எதற்கு? என்ற பூம்புகார் வசனம் இன்றும் மெய்சிலிர்க்க வைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
75 படங்கள்
தனது 88வது வயதில் ‘பொன்னர்-சங்கர்' என வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை-வசனம் எழுதினார் கருணாநிதி. கதை, திரைக்கதை, வசனம் என 75 படங்களில் கருணாநிதியின் பங்களிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.