எல்லாம் சரி, செயல்படாமல் கிடக்கும் ரயில் நிலைய லிப்ட்டுகளுக்கு எப்ப விமோச்சனம்?
சென்னை: மத்திய பட்ஜெட் நெருங்கி வருகிறது. இதில் ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி எந்த அளவுக்கு வீணாகி வருகிறது என்ற வயிற்றெரிச்சல் கதை இது.
நடப்பு பட்ஜெட்டில் முக்கிய நகர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் சுமார் 3000 எஸ்கலேட்டர்கள் மற்றும் 1000 லிப்ட்டுகளை நிறுவ நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ. 3,400 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இந்த புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வீணாகிக் கிடக்கும் எஸ்கலேட்டர்கள்
இதெல்லாம் சரிதான். கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினாலும் இந்த நிதியெல்லாம் சரியாக பயன்படுகிறதா என்று பார்த்தால் 50-50தான் ஆம் என்று சொல்ல முடிகிறது. தமிழகத்தில் உள்ள பல ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து எஸ்கலேட்டர்களும், லிப்ட்டுகளும் செயல்படும் நிலையில் இருப்பபதில்லை.
வீணாக கிடக்கும் எஸ்கலேட்டர்கள்
பல ரயில்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் முறையாக செயல்படுவதில்லை. பாதி சமயம் அவை பழுது என்று மூடப்பட்டுக் கிடக்கின்றன. பல நிலையங்களில் நிறுவி திறக்கப்படாமல் உள்ளன.
முறையான பராமரிப்பு தேவை
அமைப்பதுடன் நின்று விடுகிறார்கள் அதிகாரிகள். மாறாக, அமைக்கப்பட்ட எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் சரியாக இயங்குகின்றனவா என்று முறையாக கண்காணிப்பதில்லை. சரியான பராமரிப்பும் கிடையாது.
கோடிக்கணக்கில் வீணாகும் பணம்
ஒரு எஸ்கலேட்டர் நிறுவ ரூ. 1 கோடியும், ஒரு மின் தூக்கிக்கு ரூ. 40 லட்சம் வரையும் செலவு செய்ய வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் அண்மையில் தான் நகர மற்றும் புறநகர் ரயில் நிலையங்களின் தரத்தை எஸ்கலேட்டர் மற்றும் மின்தூக்கி பொருத்த ஏற்ற வசதி படைத்த இடமாக மாற்றப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பணத்தை வீணடிக்கும் வகையில் எஸ்கலேட்டர்கள், லிப்ட்டுகள் செயல்படாமல் இருப்பதைப் பார்க்கும்போது மக்கள் வயிறு எரிகிறது.