இடிந்து விழுந்த பொறையார் பணிமனை கட்டிடம்- 8 பேர் பலி வீடியோ!
பொறையார் அரசுப் பணிமனை ஓய்வு அறை இடிந்து விழுந்ததில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாகை : தீபாவளிப் பண்டிகை சிறப்புப் பணியை முடித்துவிட்டு பொறையார் பணிமனை ஓய்வறையில் தூங்கிக் கொண்டிருந்த 8 நடத்துநர் மற்றும் ஓட்டுநர் அதிகாலையில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பொறையார் கிராமத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பணிமனை இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இடிந்து விழுந்த இந்த கட்டிடம் 1943ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும் அதற்கான கல்வெட்டுகள் இருப்பதாகவும் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக இந்த கட்டிடத்தை புதுப்பித்துத் தர வேண்டுகோள் விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.