ரூபாய் நோட்டுக்காக குவிந்த மக்கள்.. பல வருடங்களுக்கு பிறகு 'பிசியான' தபால் நிலையங்கள்
பல வருடங்கள் பிறகு தபால் நிலையங்கள் தற்போது ரொம்பவே பிசியாகியுள்ளன. காரணம், ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்புதான்.
நெல்லை: நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் தபால் நிலையத்துக்கு படையேடுத்து வருகின்றனர். இதனால் களையிழந்த தபால் நிலையங்கள் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியுள்ளன.
வங்கிகளில் எப்போதும் பணி பரிமாற்றம் நடப்பதால் தபால் நிலையங்களில் எளிதாக பணத்தை எடுக்கலாம் என மக்கள் நினைத்த அங்கு முற்றுகையிட்டு வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை, பாளை, அம்பை, கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலைமை தபால் நிலையங்கள் உள்ளன. இவை முன் கூடும் மக்கள் கூட்டத்திற்கு தினசரி 10 லட்சம் அளித்தாலும் அவை கலாவதியாகி விடுகிறது. முந்தைய தினமே விண்ணப்பத்தை வாங்கி நிரப்பி விட்டு அடையாள அட்டையின் ஜெராக்ஸ் காப்பியோடு நிற்கும் காலை முதலே நிற்கும் கூட்டத்தால் தபால் நிலையங்கள் பழைய பொலிவை மீண்டும் பெற துவங்கியுள்ளன.
தபால் நிலையத்தில்கடந்த சில ஆண்டுகளாக துறை சார்ந்த பொருட்கள் விற்பனை குறைவாக இருந்தது. மக்களை கவர தங்கம் விற்பனை, பட்டாசு விற்பனை, கங்கை நீர் விற்பனை என பல்வேறு புதிய யுக்திகளை தபால் நிலையங்கள் கையில் எடுத்தன.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக பணத்தை எடுக்க வரும் கூட்டத்தால் தபால் நிலைய ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். பாளை, அம்பை, நெல்லை தலைமை தபால் நிலையங்களில் மாலை வரை மட்டுமே 40 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒருவரே வரிசையில் நின்று மீண்டும் மீண்டும் பணம் மாற்றுவதை தவிர்க்க தபால் நிலையத்தில் புதிய சாப்ட்வேர் பொறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒருவரி்ன் அடையாள அட்டை எண் மற்றும் செல்போன் எண் மறுபடியும் வந்தால் அவருக்கு பணம் கொடுக்க மறுக்கப்படுகிறது. இதனால் வங்கியை அடுத்து தபால் நிலையத்திலும் கருப்பு பண முதலைகளுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.