பழைய நோட்டுகளை மாற்ற சனி, ஞாயிற்றுகிழமைகளில் அஞ்சலகம் செயல்படும்: தலைமை தபால் அதிகாரி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும் என தலைமை தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வசதியாக, தபால் நிலையங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிகின்றனர். பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால், வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்தது. ஏடிஎம் மையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்துச் செல்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக வங்கிகள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளைத் தொடர்ந்து, தபால் நிலையங்களும் சனி, ஞாயிறு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி கூறுகையில், "பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் நிலையங்கள் செயல்படும். தலைமை மற்றும் துணை தபால் நிலையங்களில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த இரு நாட்களிலும் சேமிப்பு கவுண்டர்களும் திறந்திருக்கும்" என்றார்.