சட்டசபை தேர்தல்... தமிழகத்தில் தபால் ஒட்டுப்பதிவு துவங்கியது... அரசு அதிகாரிகள் ஆர்வம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம்.
வரும் 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள், முன்கூட்டியே வாக்களிக்கும் வகையில் தபால் ஓட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களாக பணியாற்ற உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யலாம்.
தபால் ஓட்டு...
இவர்கள் தேர்தலன்று தங்கள் தொகுதிகளுக்கு சென்று ஓட்டுபோட வாய்ப்பு இருக்காது என்பதால், இந்த தபால் மூலம் ஓட்டுப்போடும் திட்டம் உள்ளது.
விண்ணப்பங்கள்...
முன்னதாக தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல், தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களிலும் வினியோகிக்கப்பட்டது.
குளறுபடிகள்...
கடந்த முறை நடந்த தேர்தல்களில், இவ்விண்ணப்பங்கள் பெறுவதிலேயே குளறுபடிகள் நிகழ்ந்தன. விண்ணப்பங்கள் பற்றாக்குறையாக இருந்ததால், அலுவலர்களுக்கு அவற்றை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. பலரும், இத்தகைய அலைகழிப்புகளை காரணமாகக்கூறி தபால் ஓட்டு போடாமலேயே தவிர்த்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆந்லைனில்...
எனவே, இம்முறை இச்சிக்கலை தவிர்க்க, அவர்கள் பணியாற்றும் அலுவலகங்கள் அல்லது நிர்வாகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்பட்டுள்ளது. தேவையான எண்ணிக்கையில், பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.
மே 14ம் தேதி வரை...
அதன் தொடர்ச்சியாக இன்று முதல் தமிழக சட்டசபை தேர்தலில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இன்று முதல் மே 14 வரை தங்களின் ஓட்டுக்களை தபால் மூலம் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19ம் தேதி வரை...
இந்த தபால் ஓட்டுக்கள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி காலை வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் தபால் ஓட்டுகள் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.