நாடாண்ட வம்சத்திலிருந்து வந்திருக்கும் நல்லரசியே- சசிகலாவிற்கு ஜாதி சங்கத்தின் போஸ்டர்
நாடாண்ட வம்சம் என்று போற்றி புகழ்ந்து முக்குலத்தோர் சங்கம் சார்பில் போலீஸ் ஏட்டு ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் மறைவையொட்டி, முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. சசிகலாவை ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு பதவியில் அமர்த்த கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சசிகலாவை சின்ன அம்மா என்றும், போற்றியும் புகழ்ந்தும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த முக்குலத்தோர் சங்கம் பெயரில் போலீஸ் ஏட்டுவே போஸ்டர் அடித்து ஒட்டிய கொடுமை அரங்கேறியுள்ளது.
அவர் அடித்து ஒட்டியுள்ள அந்த போஸ்டரில் 'நாடாண்ட வம்சத்திலிருந்து நாடாள வந்திருக்கும் நல்லரசியே' எனப் புகழ்ந்தும், ஜாதி சங்கத்தை குறிப்பிட்டும், காவல் துறை தன்மான போராளி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலாவை புகழ்வதற்காக கட்சிக்காரர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் தலைமைக்காவலரின் இந்த செயல் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் அனைத்து ஜாதியினரும் உள்ளனர். இந்த நிலையில் ஜாதி கட்சியாக அதிமுக மாறுவதற்குள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.