முதுகலை ஆசிரியர் தேர்வு: வினாத்தாள் மாறியதால் வெளியேறிய தேர்வர்கள்!
முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் மாறியதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளியேறினர்.
நெல்லை: முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் மாறியதால் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளியேறினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 22 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடந்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். ஓரிரு மையங்களில் தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதால் அவர்கள் குழப்பம் அடைந்தனர்.
நெல்லை மேரி ஜர்ஜெண்ட் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடந்தது. ஆனால் அங்கு வரலாறு தேர்வு எழுத வந்தவர்கள் வந்தனர். அவர்களுக்கு தமிழுக்குரிய தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டதால் அவர்கள் திகைத்தனர்.
தேர்வுக்குறிய வினாத்தாளை வழங்க வேண்டும் என அவர்கள் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. தேர்வு கண்காணிப்பாளர் அவர்களிடம் இருந்த வினாத்தாள் மற்றும் ஓஎம்ஆர் சீட்டை பெற்றுக் கொண்டு வெளியே அனுப்பி வைத்தார்.
இந்த மையத்தில் தமிழுக்குரிய வினாத்தாள் மட்டுமே இருப்பதால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்று முறையிட அவர்கள் கேட்டு கொண்டனர். இதனால் வரலாறு தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் வெளயேறினர்.
இதே பிரச்சனை காரணமாக சாராள் தக்கார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஓருவர் வெளியேற்றப்பட்டார். வணிகவியல் தேர்வு எழுத வந்த அவருக்கு ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் அவர் வெளியேறினார்.