பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு திடீர் மாற்றம்- 'ராம்கி' தாக்குதலையும் விசாரிக்கும்?
மதுரை: மதுரையில் மு.க. அழகிரி ஆதரவாளரான பொட்டு சுரேஷ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. மு.க. அழகிரியின் புதிய வலதுகரமாக உருவெடுத்து வரும் ராம்கி மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சி.பி.சி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் அழகிரியின் மற்றொரு வலதுகரமான அட்டாக் பாண்டிக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த சபாரத்தினம், சந்தானம், ராஜா, லிங்கம், சேகர், செந்தில், கார்த்திக் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் அட்டாக் பாண்டியின் உறவினரான விஜயபாண்டி, பிரபு ஆகியோரின் தூண்டுதலின்பேரில்தான் கொலையை தாங்கள் செய்ததாகத் தெரிவித்தனர்.
தண்ணிகாட்டிய அட்டாக்
இதனிடையே விஜயபாண்டி, அவரது கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பொட்டு சுரேஷ் படுகொலைக்கு அட்டாக் பாண்டிதான் காரணம் என தெரிய வந்தது. ஆனால் அட்டாக் பாண்டி தலைமறைவாகி போலீசுக்கு தண்ணிகாட்டி வந்தார்.
சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
சுமார் 2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி அண்மையில் மும்பையில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். தற்போது அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை திடீரென சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவணங்களுக்காக...
இது தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் ஆணையர் சைலேஷ்குமார்யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்த வழக்கு தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு, அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.
ஆனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக தனியாக ஒரு இன்ஸ்பெக்டரை நியமனம் செய்தால் மற்ற பணிகள் பாதிக்கப்படும். எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
ராம்கி தாக்குதல் காரணமா?
கடந்த சில நாட்களுக்கு மு.க. அழகிரியின் புதிய வலதுகரமாக உருவெடுத்து வரும் அழகிரி மகன் துரைதயாநிதியின் நண்பரான ராமகிருஷ்ணன் என்ற ராம்கி மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த ராம்கிக்கும் பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்பிருப்பதாக அட்டாக் பாண்டி தொடர்ந்து கூறி வருகிறார்.
ராம்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் பொட்டு சுரேஷ் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில்தான் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது மதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.